அழுதுண்டு வாழ்வோம் !
காப்பு !
உயிரெலாம் உலகில் வாழ
உதவிடும் மங்கை நல்லாள் !
பயிரெலாம் வளர்த்து நன்றாய்
பாரினில் பசுமை ஊட்டி
வயிரெலாம் நிறைத்து நாட்டில்
வருகிற வறுமை ஓட்டி
உயிரெலாம் காக்கும் தாயே !
உதவிடென் கவிதை காக்க !
௧. விதையினை கையில் ஏந்தி
விதைத்திடும் உழவன் நானென்
கதையினை கேட்பாய் பாரே !
கனவிலும் நினையார் யாரும்
சிதையினை வதைக்கும் தீயில்
குளிரினில்,காற்றில் , நோயில்
பதைத்தினும் உழைக்கும் வாழ்க்கை
பண்புளோர் இதனை கேட்க !
௨. மடியிலே வாங்கி நித்தம்
மனையிலே உலையில் போடும்
நொடியிலே தீர்ந்து போகும்
நிலையிலா எந்தன் வாழ்வு
விடியுமா எமக்கு காலம் ?
விடியுதே உலகில் நாளும்
வடித்திடும் கண்ணீர் கண்டு
கடலதும் கடன்கள் கேட்கும் !
௩. உழுதிடும் எங்கள் பின்னே
உலவிட வேண்டும் என்றும்
தொழுதுநல் உலக மக்கள்
போற்றிட சொன்னார் யாரோ ?
அழுதிடும் வாழ்க்கை வாழ்ந்து
அனைவரின் பின்னே சென்று
தொழுதிடும் வாழ்க்கை வாழ்ந்து
சாகிறோம் துயரில் ஆழ்ந்து !
௪. சந்தை கொணர்ந்த பொருளனைத்தும்
குறைந்த விலைக்கு போவதைநாம்
விந்தை யோடு பார்த்திருப்போம்
விளைய வைக்க பட்ட இன்னல்
சந்தை மக்கள் ஏதறிவார் ?
சரிதம் முதலாய் நாங்கள்தாம்
கந்தல் ஆடை சொந்தமென்று
கண்டு கொள்வோம் அந்தமட்டே !
௫. கையில் வாங்கும் பணமெல்லாம்
கணநே ரத்தில் பறந்திடுமே !
பையில் போட இருக்காது
பட்ட கடனை அடைத்திடவே !
வெய்யில் முன்னே பனிபோலே
வந்த பணமும் கரைந்திடுமே !
மெய்யில் பட்ட வேதனைகள்
வருடம் முழுதும் நிலைத்திடுமே !
௬. மீண்டும் விதைக்க பணமில்லை !
மீண்டும் கடனே வேறில்லை!
யாண்டும் உலக உயிர்காக்க
எங்கள் குலமே பயிர் காத்து
வேண்டும் மட்டும் உணவிட்டு
வாழும் வாழ்க்கை கண்டுஎங்கள்
தோண்டும் கிணறும் ஊறிவிடும் !
பட்ட துன்பம் ஆறிவிடும் !
[ கல்லூரியின் ஆண்டு புத்தகம் வென்றியத்தில் (TRIUMPH 1986 - 87) என் முதலாம் ஆண்டு தொடக்கத்தில் நான் எழுதி இடம் பெற்ற கவிதை ]